நீட் தேர்வு முடிவுகளை ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இதிட்டம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜுன் 3-வது வாரத்தில் தொடக்கம் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜுன் 3-வது வாரத்தில் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26 ஆயிரத்து 775 மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் நீட் தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்கள் உட்பட நாடுமுழுவதும் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வரும் ஜூன் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்று டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு எப்போது தொடங்கப்படும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளின் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 3-வது வாரத்தில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும்” என்றார்.