'மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்தாண்டு முதல், 'ஆன்லைன்'முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'தமிழகத்தில், முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங், ஆன்லைன் முறையில் நடைபெறும்' என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள், கடந்தாண்டு அறிவித்திருந்தனர். ஆனால், வழக்கம் போல், நேர்முக அடிப்படையில் தான், கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதற்கு, தமிழக அரசின் குழப்ப நிலையே காரணம் என,அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:கடந்த ஆண்டே, மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை, 'ஆன்லைன்' முறையில் நடத்த திட்டமிட்டிருந்தோம்.ஆனால், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வா அல்லது பிளஸ் 2மதிப்பெண் அடிப்படையிலா என்ற குழப்பம்இருந்தது.அரசு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் நம்பிக்கையில் இருந்ததால், 'ஆன்லைன் கவுன்சிலிங்' முறையில் சிக்கல் இருந்தது.

தற்போது, நீட் தேர்வு உறுதியாகிவிட்டதால், அடுத்தாண்டு முதல், ஆன்லைன் முறையில், மருத்துவ கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இதனால், கவுன்சிலிங் நடத்துவதற்கான செலவு குறையும். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கும் அலைச்சல் இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.