சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு நேரங்களில் ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்காக உருவாக்கப்பட்ட, இலவச தொலைபேசி ஆலோசனை மையத்தில், இந்த ஆண்டு, மாணவியரை விட, மாணவர்களே அதிக அளவில், ஆலோசனை பெற்றனர்.

சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாட திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வு நேரங்களில் ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்காக, இலவச தொலைபேசி ஆலோசனை மையங்களை மத்திய அரசு உருவாக்கியது.இந்த மையங்களில், உளவியல் படித்த, நன்கு பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் பணி அமர்த்தப்பட்டனர். நாட்டின் எந்த பகுதியிலிருந்தும், 800 11 8004 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு, இந்த ஆலோசனை மைய அதிகாரிகளுடன், மாணவர்கள் பேசலாம். அவர்கள், மாணவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குவர். இதற்காக, 91 ஆலோசகர்கள், நியமிக்கப்பட்டனர்.இவற்றில், 70 மையங்கள் இந்தியாவிலும், 20 மையங்கள் நேபாளம், சவுதி அரேபியா, சிங்கப்பூர், கத்தார் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் செயல்படுகின்றன.

இந்த மையங்களை தொடர்பு கொள்ளும் மாணவர்கள், தங்களுக்கு உள்ள கற்றல் குறைபாடு, பாடங்களை மனப்பாடம் செய்வதில் உள்ள சிக்கல், பெற்றோருடனான பிரச்னை, தேர்வு பயம், எதிர்காலம் குறித்த பதற்றம் ஆகியவை குறித்து ஆலோசனைகள் பெற்றனர்.

இந்த ஆண்டு, பிப்ரவரி, 1 முதல், மே, 16 வரை, இந்த ஆலோசனை மையத்தை பல மாணவர்கள் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இதில், மாணவியர், 962 பேரும், மாணவர்கள் 2,132 பேரும் ஆலோசனை பெற்றனர்.மாணவியரை விட, இரண்டு மடங்குக்கும் அதிக மாணவர்கள், மன உளைச்சல் தொடர்பாக ஆலோசனை பெற்றனர்.