ஒரே நாளில் இரு போட்டித் தேர்வுகள்: குழப்பத்தில் தேர்வாளர்கள்


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த டிச.23-ம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்வானவர்கள் அடுத்த கட்டமாக உடற்கூறு அளத்தல் மற்றும் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல் ஆகியவை ஜன.21-ம் தேதி சென்னையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இதேபோன்று, மத்திய அரசின் ரயில்வே தேர்வு வாரியம் சார்பில் உதவி லோகோ பைலட் பதவிக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் தேர்வானவர்களுக்கு அடுத்து இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வு ஜன.21-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 2 தேர்வுகளிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் முதல்நிலை தேர்வில் தேர்வு பெற்று, 2-ம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆனால், 2 தேர்வுகளும் ஒரே நாளில் நடைபெற உள்ளதால் எதில் பங்கேற்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, திருச்சி இளைஞர் ஒருவர், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: நான் 2 தேர்வுகளிலும் 2-ம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளேன். ஆனால், சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பதவிக்கான உடல்கூறு அளத்தல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி ஜன.21-ம் தேதி சென்னையிலும், அதே நாளில் ரயில்வே உதவி லோகோ பைலட் இரண்டாம் நிலை எழுத்துத் தேர்வு மதுரையிலும் நடைபெறவுள்ளன. 2 தேர்வுகளும் ஒரே நாளில் நடத்தப்பட உள்ளதால் என்ன செய்வதென தெரியாமல் குழப்பத்தில் உள்ளேன். ஏதேனும் ஒரு தேர்வு நடைபெறும் நாளை மாற்றி அமைத்தால், என்னைபோல ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source தி இந்து