Jactto-Geo : வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு : போலீஸ் கமிஷனர் அலுவலக அமைச்சு பணியாளர்கள் போராட்டம்


ஜாக்டோ - ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்புகள் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் முழு ஆதரவு தெரிவித்திருந்தது. அதன்படி, நேற்று தமிழக காவல் துறை இயக்குநர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உணவு இடைவேளையின்போது அமைச்சு பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. அரை மணி நேரம் நடந்த போராட்டத்தால் சிறிது நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.