NCERT பாடத் திட்டத்தில் திருக்குறள்: தருண் விஜய் வலியுறுத்தல்


தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை புதன்கிழமை சந்தித்து மனுவுடன் நினைவுப்பரிசு  அளித்த  மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண் விஜய்.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) அகில இந்திய பாடத் திட்டத்தில் திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் அவர் எழுதிய திருக்குறள் பாக்களை இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் தமிழ் ஆர்வலரும், திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய் வலியுறுத்தினார்.

புது தில்லியில் மத்திய அமைச்சர் ஜாவடேகரை அவரது பிறந்த நாளை ஒட்டி மாநிலங்களவை பாஜக முன்னாள் உறுப்பினரான தருண் விஜய் புதன்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) அகில இந்திய பாடத் திட்டத்தில் திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் அவர் எழுதிய திருக்குறள் பாக்களை இடம் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தனியார் கல்லூரிகளில் திருக்குறளை பரப்ப பணியாற்றுவதாக அமைச்சரிடம் உறுதியளித்தார்.

இதுகுறித்து தருண் விஜய் கூறுகையில், இந்தியா முழுவதும் திருவள்ளுவரின் கருத்துகளை பரப்புவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. பிரதமரிடமிருந்து பெற்ற தூண்டுகோல்தான் திருக்குறளைப் பரப்பும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன் என்றார்.