10ம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு


பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு நாளை முதல் செய்முறை தேர்வு நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.  தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 14ல் துவங்கி மார்ச், 29 வரை நடக்க உள்ளது.ஏற்கனவே பிளஸ் 2 செய்முறை தேர்வு முடிந்து விட்டது; பிளஸ் 1 செய்முறை தேர்வு, நாளை முடிய உள்ளது.  இதையடுத்து நாளை முதல் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை நடத்த தேர்வு துறை இணை இயக்குனர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.  

இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வை எந்த குளறுபடியுமின்றி முறையாக நடத்த வேண்டும். பிற பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும். செய்முறை தேர்வை இன்று முதல் நடத்த ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. தற்போது உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வை  நாளை துவக்கி பிப்.,28க்குள் நடத்தி முடிக்க வேண்டும். மதிப்பெண் பட்டியலை ஏற்கனவே அறிவுறுத்திய முறையில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் வழியே ஆன்லைனில் பதிவு செய்து தேர்வு துறை இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.  இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.