சங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் விடுப்பு பள்ளி கல்வி துறை திடீர் கட்டுப்பாடு



சென்னை : அங்கீகாரம் பெற்ற சங்க நிர்வாகிகளுக்கு, ஆண்டுக்கு, 15 நாட்கள் கூடுதல் விடுப்பு அளிக்கப்படும்; மற்றவர்களுக்கு கிடையாது' என, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், ஜனவரியில், ஒன்பது நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. போராட்டத்தை, அமைப்பின் நிர்வாகிகள் தீவிரப்படுத்தியதால், அவர்கள் மீது, போலீஸ் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், ஒவ்வொரு சங்கத்தின் பதிவு அங்கீகாரம், அவற்றின் பதிவுக்கான காலம், சங்கத்தை செயல்படுத்திய முறைகள் குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், பல சங்கங்கள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதும், அதன் நிர்வாகிகள், கூடுதலாக, 15 நாட்கள் விடுப்பு எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சங்க நிர்வாகிகளுக்கு கூடுதல் தற்செயல் விடுப்பு இல்லை என, முதன்மைக் கல்வி அதிகாரிகள், கட்டுப்பாடு விதித்தனர். 

இதுகுறித்து, தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில், பள்ளி கல்வி துறையில் முறையிடப்பட்டது. இதுதொடர்பாக, அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அங்கீகாரம் இல்லாத சங்கத்தின் நிர்வாகிகளும், சங்க பணிகளுக்காக, கூடுதலாக, 15 நாள் தற்செயல் விடுப்பு பெற்று வந்தது தெரிந்துள்ளது. 

பள்ளி கல்வி இணை இயக்குனர், நாகராஜ முருகன், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அங்கீகாரம் பெற்ற சங்கங்களில் இருக்கும், மாநில பொறுப்பாளர்களுக்கு, 15 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு, ஆண்டுதோறும் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. எனவே, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், சங்கத்திற்கு, மாநிலம் முழுவதும் கிளைகள் இருந்தால், அதன் மாநில பொறுப்பாளர்கள், சங்க பணிகளில் பங்கேற்க, 15 நாட்கள் தற்செயல் விடுப்பு, கூடுதலாக வழங்கப்படும். அங்கீகாரம் பெற்ற சங்க நிர்வாகிகளுக்கு மட்டும், அரசாணையின்படி, இந்த விடுப்பை அனுமதிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.