பள்ளி தேர்வு முடிவது எப்போது?

தமிழகத்தில், பள்ளி பொதுத் தேர்வு மற்றும் இறுதி தேர்வுகள் முடிவடையும் தேதி குறித்து, இரண்டு நாட்களில், தேர்தல் கமிஷனில் தெரிவிக்கப்பட உள்ளது.லோக்சபா தேர்தல், மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான பணிகளில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. தேர்தல் வருவதால், பள்ளி தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, தேர்வுகள் அனைத்தும் முடிவடையும் தேதி குறித்து, பள்ளிக் கல்வித் துறையிடம், தேர்தல் கமிஷன், விபரம் கேட்டு உள்ளது.இது தொடர்பான அறிக்கையை, பள்ளிக்கல்வித் துறை தயார் செய்துள்ளது. பிளஸ் 2 - மார்ச், 19; பிளஸ் 1 - மார்ச், 29 மற்றும் 10ம் வகுப்பு - மார்ச், 29ல் பொதுத் தேர்வுகள் முடிவடைய உள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதேபோல், மற்ற வகுப்புகளுக்கான, ஆண்டிறுதி தேர்வுகள், ஏப்., 20ம் தேதி முடிகின்றன. பின், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஏப்., 30 வரை கற்பித்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடத்தப்படுகிறது.இந்த பணிகள் முடிந்து, பிளஸ் 2க்கு, ஏப்., 19; பிளஸ் 1 - மே, 8 மற்றும் 10ம் வகுப்பு - ஏப்., 29ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்த விபரங்களும், தேர்தல் கமிஷனுக்கான அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.விடைத்தாள் திருத்தும் பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தேர்தல் தேதியை அறிவிக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் கேட்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.