நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன!



நாகர்கோவில் மற்றும் ஓசூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன. நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன.  இந்நிலையில் மேலும் 2 மாநகராட்சிகள் உதயமாகிறது. நாகர்கோவில், ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு இன்றே சட்டப்பேரவையில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக ஓசூர் திகழ்கிறது. நாட்டில் மிகப்பெரிய சிப்காட் தொழிற்பேட்டை, டால் விமான நிலையம், ஐ.டி. பார்க் ஆகியவை ஓசூரில் உள்ளன. 1962 ஆம் ஆண்டு ஊராட்சியாக இருந்த ஓசூர், பின் தேர்வுநிலை பேரூராட்சியாக மாற்றப்பட்டது. 1992-ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1998-ல் சிறப்பு தேர்வுநிலை நகராட்சியாகவும் மாற்றப்பட்டது. கடந்தாண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஓசூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது.

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில், 1920-ல் உருவாக்கப்பட்டது. 1978-ல் தேர்வு நிலை,1988-ல் சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது. தற்போது 52 வார்டுகள் உள்ளன. 2011-ல், ஆசாரிப்பள்ளம் பேரூராட்சி மற்றும் நான்கு ஊராட்சிகள், நாகர்கோவில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டன. மொத்த மக்கள் தொகை 2.60 லட்சம்; பரப்பளவு, 49.10 சதுர கி.மீ. கடந்தாண்டு நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது நாகர்கோவில் மாநகராட்சியாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில்  நாகர்கோவிலை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது.