தேர்வெழுதும் கண்மணிகளுக்கு நல்வாழ்த்துகள் - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்


பள்ளிப்பூக்களே

உங்கள் மலர்ச்சியின் ரகசியமெழுதும் நன்நாள் நாளை
கிடைக்கட்டும் உங்களுக்கு வெற்றி மாலை

சிறகு விரித்த பறவைகளே நீங்கள் வானம் அளந்த கதையை அழகாக எடுத்தியம்ப போகிற பொன்நாள் நாளைய தேர்வுநாள்
உங்கள் அத்துணை விடைகளின் உருவிலும்  உமது ஆசிரியர் இருப்பர் பின்னால்

கற்கண்டோ கற்பாறையோ உங்கள் மனது எப்படி வார்த்திருக்கிறதோ இத்தேர்வை??
ஒருபோதும் அடைந்திடாதீர் மனச்சோர்வை..

கற்கண்டெனில் இனிமையாய் ருசித்து உண்க
கற்பாறை எனில் அறிவுளியால் அழகிய சிற்பம் செய்க

பதட்டமோ பயமோ யாவையும் புறந்தள்ளு
இதொன்றும் போரல்ல...
அழகிய தேர்வு
அதை வெல்ல அறிவாயுதமே போதும்

ஒவ்வொரு நொடியும் உனக்கு பொன்னினும் மேலானது
கவனத்துடன் கையாள்க
படித்த அத்தனையும் பாங்குற நினைவு கூர்க

உடல்நல கவனமெடு
தொலைக்காட்சி தவிர்
வெற்று அரட்டைகளை விலக்கு
சந்தேகமேதுமிருப்பின் தயங்காது ஆசானைக் கேட்டறி
வெற்றி ஒன்றே இந்த நேரத்தில் உனது குறி

எனக்கு தெரிந்து நீயே எதிர்கால இந்தியா
கபடமற்ற நல்லுள்ளமே
கவனமுடன் தேர்வெழுது
உன் அறிவை நன்குழுது

வெற்றியோ தோல்வியோ ஏதோ ஒன்று உனக்குண்டு..
வெற்றியை மட்டுமே பெற மகிழ்வோடு நீ போராடு

தேர்வென்பது முந்நூறு நாளின் உழைப்பினை இரண்டரை மணி நேரத்தில் வெளியிடுவது..
வளவளவென விவரிப்பதில் சலிப்புதானே மிஞ்சும்
சுருங்கச்சொல்லி விளங்க வைத்தால் நீதான் பத்தரைமாத்து தங்கம்

உன் முன் வரப்போவது கொடும்புலியோ கோவச்சிங்கமோ அல்ல...
வினாத்தாள் மட்டுமே
விடையெழுது பயமின்றி
பதட்டம் சிறிதுமின்றி

வெல்வாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு
நீயும் சூடுக வெற்றி மலர்ச்செண்டு

நட்சத்திரம் ஆயிரமிருப்பினும் நிலவே மனங்குளிரச்செய்யும்
நிலவாகு...
தேய்ந்தாலும் வளர்ந்து முழுமதியாகு

வெற்றிக்கான உன்பயணம் வெற்றிக்காண என் வாழ்த்துகள்


உங்களோடு என்றும்,

சீனி.தனஞ்செழியன்