பொதுத்தேர்வு பயம் போக்க உளவியல் கவுன்சிலிங்



"பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு குறித்து உளவியல் ரீதியாக கவுன்சிலிங் வழங்கப்படும்" என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., சார்பில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவங்கி உள்ளது. பிளஸ் 2வுக்கு, பிப்., 12லும், 10ம் வகுப்புக்கு, பிப்., 21லும், தேர்வுகள் துவங்கின. முதல் கட்டமாக தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு பொதுத் தேர்விலும் மாணவர்கள் தேர்வு பயத்தால் தடுமாறுவதும் சிலர் அசம்பாவிதமான முடிவுகளை எடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. 

இந்நிலையில், 22ம் ஆண்டாக பொதுத் தேர்வு மாணவர்களுக்கு இந்த ஆண்டும் உளவியல் ரீதியாக கவுன்சிலிங் வழங்கப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. தேர்வு விதிகள் பயமின்றி தேர்வை எழுதுதல் தேர்வு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மனநல மற்றும் உடல்நல ஆலோசகர்களால் வழங்கப்படும். இதற்கு 1800 11 8004 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  கூடுதல் விபரங்களை, www.cbse.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.