CBSE - 10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்குகின்றன. சமூக வலைதளங்களில் தகவல்களை பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொது தேர்வு துவங்குகிறது. முதல் கட்டமாக விருப்ப பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கின்றன. முக்கிய பாடங்களுக்கு மார்ச் 7ல் தேர்வுகள் துவங்க உள்ளன.  இந்த தேர்வில் 21 ஆயிரத்து 400 பள்ளிகளை சேர்ந்த 18.27 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்க உள்ளனர். 

நாடு முழுவதும் 4,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தேர்வில் வினாத்தாள் 'லீக்' ஆகாமலும் தேர்வில் முறைகேடு நடக்காமலும் தடுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு அறை வாரியாக திடீர் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடை குறிப்புகளை தேர்வுக்கு முன்னும் பின்னும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.  'தாங்கள் படிக்கும் பள்ளி அல்லது தேர்வு மையத்தில் பொறுப்பாளர்களை அணுகி எந்த தகவலையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்' என மாணவர்களும் பெற்றோரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.