10ம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: 9.97 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது.

 தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் படிக்கும் 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 பள்ளி மாணவர்கள், 38 ஆயிரத்து 176 தனித் தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு  எழுதுகின்றனர்..  சென்னை மாவட்டத்தில் இயங்கும் 567 பள்ளிகள் மூலம் 50 ஆயிரத்து 678 பேர் எழுதுகின்றனர். அவர்களுக்காக சென்னையில் 213 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியை சேர்ந்த 302 பள்ளிகளில் படிக்கும் 16 ஆயிரத்து 597 மாணவ மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.அவர்களுக்காக புதுச்சேரியில் 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பத்தாம் வகுப்பு தேர்வில் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை,திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையை சேர்ந்த 152 கைதிகளும் பங்கேற்கின்றனர். அவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுத உள்ள 5 லட்சத்து 22ஆயிரத்து 409 பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 49 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 500 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.  தேர்வின் போது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலை, மாலை தேர்வுகள் பத்தாம் வகுப்பு தேர்வில் இடம் பெறும் தமிழ் மொழிப்பாடத்தில்( முதல் தாள் இரண்டாம் தாள்), ஆங்கில மொழிப்பாடத்தில்(முதல் தாள், இரண்டாம் தாள்) ஆகியவற்றுக்கான தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 வரை நடக்கும்.  மற்ற பாடங்களானகணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்பமொழிப் பாடங்களுக்கான தேர்வுகள்  அனைத்தும் காலை10 மணிக்கு தொடங்கி  மதியம் 12.45 வரை நடக்கும்.தேர்வின்போது கேள்வித்தாள் படித்துப் பார்க்க, விடைத்தாள் முகப்பு பக்கத்தில் விவரங்கள் எழுதி கையெழுத்திட 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.