தனியார் இன்ஜி., கல்லுாரிகளுக்கு 15ல், 'அட்மிஷன்' விதிகள் அறிவிப்பு


தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான விதிகளை வகுக்க, வரும், 15ல், உயர் கல்வி துறை சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.தமிழகத்தில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படுகின்றன. 

இந்த கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின், அங்கீகாரம் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், அனுமதியுடன் செயல்படுகின்றன.இவற்றில், அரசு ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, தமிழக உயர் கல்வி துறை சார்பில், 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. மீதமுள்ள, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில், மாணவர்களை சேர்க்க, அந்தந்த கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு, தனியார் சுயநிதி கல்லுாரிகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் விதிகள் வகுக்கப்படும்.தனியார் கல்லுாரியில், இந்த விதிகளின்படியே, மாணவர் சேர்க்கப்படுவர். 

வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - எம்.ஆர்க்., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளில், மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் வகுக்கப்பட உள்ளன. இதற்காக, உயர் கல்வி துறையின், உயர்மட்ட குழு கூட்டம், வரும், 15ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, உயர் கல்வி கட்டண நிர்ணய கமிட்டி அலுவலகத்தில், அன்று பிற்பகல், 3:00 மணிக்கு கூட்டம் நடக்க உள்ளது.