பிளஸ்1 கணக்கு தேர்வு கடினம்: கண்ணீர்விட்டு அழுத மாணவிகள்

பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு கடந்த 6ம் தேதி தொடங்கியது. கணக்கு, விலங்கியல், வணிகவியல் உள்பட தொழில் பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன.

கணக்குப் பாடத் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் முற்றிலும் மாறுபட்டு இருந்ததால் மாணவ- மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். பிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ேதர்வு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு 100 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
ஆனால், நேற்றைய கணக்குப் பாடத் தேர்வில் காலாண்டு, அரையாண்டு கேள்வித்தாள் போல அல்லாமல் வேறு வடிவமைப்பில் கேள்வித்தாள் இருந்தது.

அத்துடன் கடினமாக பகுதிகளில் இருந்து கேள்விகள் அதிகம் இடம் பெற்று இருந்தன. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெரும்பாலான கேள்விகளுக்கு விடை எழுத முடியாமல் திணறிய பல மாணவ- மாணவியர் தேர்வு அறையில் கண்ணீர் விட்டு அழுதனர்.

இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் மாணவ மாணவியர் புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்களோ, காலண்டு, அரையாண்டு தேர்வுக்கான கேள்வித்தாள்களை தேர்வுத்துறை வடிவமைக்கவில்லை என்றும், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வடிவமைத்தனர் என்றும் தெரிவித்தனர்.