போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு எப்போது ரத்து செய்யப்படும்? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில், யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆய்வு நடைபெற்று வருகிறது. பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தடையின்மை சான்று பெறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அப்போதுதான் பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ய முடியும்.அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி இல்லாததால்தான் பெற்றோர் தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்த்தனர். தற்போது அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் மற்றும் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் அதிக அளவில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட தற்காலிக பணிநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனினும், அவர்கள் மீதுபதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்து தமிழக முதல்வர்தான் முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.