'அக்கவுன்டன்சி' தேர்வுக்கான வினாத்தாளில் வாக்கிய பிழை



பிளஸ் 2, சி.பி.எஸ்.இ., கணக்கு பதிவியல் தேர்வில், வினாத்தாளில் ஏற்பட்ட வாக்கிய பிழையால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2தேர்வு நடந்து வருகிறது. கணக்கு பதிவியல் என்ற, 'அக்கவுன்டன்சி' பாடத்திற்கான தேர்வு, நேற்று நடந்தது.

இந்த தேர்வில், முந்தைய ஆண்டுகளை விட, வினாத்தாள் எளிதாக இருந்தது.பல கேள்விகள், நீண்ட விடை எழுதும் வகையில் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். அதேபோல, பல கேள்விகள், புத்தகத்தில் இருந்து நேரடியாக வந்ததால், மாணவர்கள் எளிதாக பதில் அளிக்க முடிந்தது.

அதேநேரம், வினாத் தாளில் ஏற்பட்ட வாக்கிய பிழையால், மாணவர்கள் குழப்பம்அடைந்தனர். ஒரு கேள்விக்கு, 'அறிந்து கொள்ளும் கணக்கு' என்பதற்கு பதில், 'மறுமதிப்பீட்டு கணக்கு' என்ற பொருளில், ஆங்கில வார்த்தை இடம் பெற்றது. இந்த பிழையால், மாணவர்கள் பதில் எழுத தாமதம் ஏற்பட்டது. பின், வாக்கிய பிழை என தெரிந்து, பதில் எழுதினர்.

இதற்கிடையே, சி.பி.எஸ்.இ., தேர்வில், கணக்கு பதிவியல், வேதியியல், புவியியல், கணிதம் உள்ளிட்டவற்றுக்கான வினாத்தாள் என்ற பெயரில், சில புகைப்படங்கள், ஆன்லைனில் வெளியாகின. இது குறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில், டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 'மாணவர்கள், இதுபோன்ற ஆன்லைன் தகவல்களை நம்ப வேண்டாம். அவை போலியானவை' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.