பள்ளி பொதுத் தேர்வுகளில் காப்பியடித்துபிடிபடும் மாணவர்கள், பொதுத் தேர்வு முழுவதும் பங்கேற்கத் தடை

பள்ளி பொதுத் தேர்வுகளில் காப்பியடித்து பிடிபடும் மாணவர்கள், பொதுத் தேர்வு முழுவதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அடுத்து வரும்  இரண்டு பொதுத் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பு:

 தேர்வறையில் கண்காணிப்பாளரால் சோதனை செய்யப்படாத நிலையில், தானாக முன்வந்து தான் வைத்திருந்த புத்தகம் அல்லது எழுதப்பட்ட துண்டு தாள்களை ஒப்படைக்கும் மாணவர்கள் முதல் கட்டமாக எச்சரிக்கப்படுவர். தொடர்ந்து இதே தவறைச் செய்யும் மாணவர்களிடம், விளக்கக் கடிதம் பெறப்பட்டு  பின்னர் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவர்.

மாறாக, கண்காணிப்பாளரால் பிடிக்கப்படும் மாணவர்கள், அந்தத் தேர்வில் பங்கேற்கத் தடை விதிக்கப்படுவதோடு, அடுத்து வரும் இரண்டு பொதுத்தேர்வுகளிலும் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். அதேபோல, பக்கத்து மாணவரைப் பார்த்து காப்பியடிக்கும் அல்லது வேறு நபர்களிடம் உதவியைப் பெற முயலும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு முழுவதும் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் என்பதோடு, அடுத்த ஓராண்டுக்கு அல்லது அடுத்து வரும் இரண்டு தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்படும்.பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு, அந்தத் தேர்வு முழுவதும் அனுமதி மறுக்கப்படும் என்பதோடு, பொதுத் தேர்வில் பங்கேற்பதிலிருந்து நிரந்தரமாகத் தடை விதிக்கப்படும்.

வேறொரு மாணவருக்கு உதவும் வகையில் தனது விடைத் தாளில் பதிவு எண்ணை மாற்றிக் குறிப்பிடுதல் அல்லது விடைத்தாளை வேறு மாணவருடன் மாற்றிக் கொள்ளுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அந்தத் தேர்வு முழுவதும் பங்கேற்கத் தடை விதிக்கப்படுவதோடு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது அடுத்து வரும் 10 தேர்வுகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். அதுபோல, கேள்வித் தாளை தேர்வறையிலிருந்து வெளியில் அனுப்பி விடும் மாணவர்களுக்கு அந்தத் தேர்வு முழுவதும் தடை விதிக்கப்படுவதோடு, அடுத்தமூன்று ஆண்டுகளுக்குத் தேர்வில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.