CPS குறித்து அரசு ஊழியர் சந்தேகங்களுக்கு ஆதாரத்துடன் அரசு பதில்அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகள் தொடர்பான மனு, மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியனும், ஜாக்டோ- ஜியோ தரப்பில் மூத்த வக்கீல் பிரசாத், சங்கரன் மற்றும் லஜபதிராய் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது நடந்த வாதம் வருமாறு:-

மூத்த வக்கீல் பிரசாத்:- ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு வழங்கும் போது, அரசின் தலைமை செயலாளர் நேரில் ஆஜராகி, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.1.1.2016-ல் 7-வது சம்பள குழு பரிந்துரைக்கப்பட்டு, அதன் முரண்பாடுகள் தற்போதுவரை களையப்படாமல் உள்ளது. நியாயமான கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படாமல் உள்ளன. 9 மாதங்கள் ஆன பின்னரும் நிலுவைத்தொகை வழங்கவில்லை.தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோர் நிலுவைத்தொகை பாக்கி இல்லாமல் பெற்றுக்கொண்டனர்.ஆனால், ஊழியர்களுக்கு வழங்க மறுக்கின்றனர். மேலும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

நீதிபதிகள்: புதிய பென்சன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்ட பின்னரே அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.இப்போது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அரசு வக்கீல்: நாடு முழுவதும் புதிய பென்சன் திட்டம் அமலில் உள்ளது.

வக்கீல் சங்கரன்: சி.பி.எஸ். என்று சொல்லப்படும் புதிய பென்சன் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு இன்று வரை ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை.

அரசு வக்கீல்: முற்றிலும் தவறான தகவலை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். ஒரு சில தனிநபர்களின் வழக்கை ஒட்டு மொத்த ஊழியர்களின் பிரச்சினையாக முன்வைக்கின்றனர். இதுநாள் வரை, புதிய பென்சன் திட்டத்தில் 11 ஆயிரத்து 335 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.அவர்களது மனுக்களின் பரிசீலனைக்கு பின்னர் ரூ.441 கோடி பணப்பலன்கள் வழங்கப்பட்டுள்ளது.10 ஆயிரத்து 116 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வாதம் நடந்தது.

பின்னர் நீதிபதிகள், வருகிற 11-ந் தேதி வக்கீல் சங்கரன், புதிய பென்சன் திட்டம் குறித்து அரசு ஊழியர்களுக்கு உள்ள சந்தேகங்கள் குறித்து கேள்வியாக மனு தாக்கல் செய்ய வேண்டும்.அரசு தரப்பில், அந்த கேள்விகள், சந்தேகங்களுக்கு ஆதாரங்களுடன் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்