TET 2019 - தவறாக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டும் - தேர்வர்கள் வேண்டுகோள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்விற்கான ஆன் லைன் விண்ணப்பத்தில் தகவல்களை சரி பார்த்து சமர்ப்பிக்கும் வழிமுறை இல்லாததால் விண்ணப்பதாரர்கள் தவறுகளுடன் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.,28 ல் அறிவித்தது.

அதற்கான விண்ணப்பங்களை 'ஆன் லைன்' மூலம் http://trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் மார்ச் 15 முதல் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தியது. நான்கு ஆண்டுகளுக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ள இத்தேர்விற்கு பலரும் ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர். வழக்கமாக இது போன்ற ஆன் லைன் விண்ணப்பங்களில் முழுமையாக விண்ணப்பித்த பின், அதை சரிபார்த்து திருத்தம் செய்யும் வகையில் விண்ணப்பம் இருக்கும். ஆனால் தகுதித் தேர்வில் விண்ணப்பித்த பின் அதை சரி பார்க்காமல் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

பலரும் தனியார் கணினி மையங்களில்தான் விண்ணப்பிக்கின்றனர். அந்த மைய ஊழியர் செய்யும் தவறு விண்ணப்பதாரரை பாதிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. விண்ணப்பத்தின் கடைசி விதியாக, இவ்விண்ணப்பத்தில் உண்மையான, சரியான, முழுமையான தகவல்களை தருகிறேன். விபரங்கள் தவறானது என தெரிந்தால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்பதை அறிவேன்' என விண்ணப்பதாரர் உறுதியளிக்கின்றனர். இதனால் விண்ணப்பித்தை சரிபார்த்து சமர்ப்பிக்கும் வாய்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்படுத்த ஆசிரியர்கள் கோரியுள்ளனர். கடைசி நாள் 5.4.2019 என்பதால் இது வரை தவறாக விண்ணப்பித்தவர்களுக்கு திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.