TNPSC - அரசுப் போட்டித் தேர்வு எழுதி ஒரேநேரத்தில் பணி நியமனம் பெற்ற தாய், மகள்!



தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த தாயும் மகளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய  குரூப்- 4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று ஒரே நேரத்தில் பணி நியமனம் பெற்றுள்ளனர்.

தேவதானப்பட்டி விவசாயி ராமச்சந்திரன் மனைவி சாந்திலட்சுமி (48). பி.எஸ்.சி.,படித்துள்ளார். மகள் தேன்மொழி (27) எம்.ஏ. படித்துள்ளார். ராமச்சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.  சாந்திலட்சுமி, தேன்மொழி ஆகியோர் தேனியில் திண்ணை அமைப்பின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்- 4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை எழுதிய இருவரும் தேர்வில் வெற்றி பெற்றனர். கலந்தாய்வு மூலம் சாந்திலட்சுமி பொது சுகாதாரத் துறை மருந்தகப் பிரிவிலும், தேன்மொழி இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளராகவும் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.போட்டித் தேர்வு மூலம் பணி நியமனம் பெற்ற சாந்திலட்சுமி, தேன்மொழி ஆகியோருக்கு திண்ணை அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பயிற்சியாளர்கள்வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து சாந்திலட்சுமி கூறியது:அரசு போட்டித் தேர்வுக்கான வயது வரம்பு குறித்துஎனக்குத் தெரியாது. எனது மகளை திண்ணை பயிற்சி வகுப்பில் சேர்க்க வந்தேன். அங்கு எனக்கு போட்டித் தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, என்னையும் பயிற்சி வகுப்பில் சேர்த்து படிக்க வைத்தனர். எனது மகள் தேன்மொழியின் உதவியுடன் வீட்டிலும் பயிற்சி பெற்று இருவரும் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றுள்ளோம் என்றார்.