பிரீபெய்டு மின் மீட்டர் ஏப்ரல்., 1 ம் தேதி முதல் அமலாகிறது


மத்திய அரசின் திட்டப்படி, எல்லா வீடுகளிலும் கட்டாயமாக பிரீபெய்டு மின் மீட்டர் ஏப்ரல் 1 ம் தேதி முதல் பொருத்தப்பட உள்ளது. நாடு முழுவதும், அடுத்தாண்டு, ஏப்., 1 முதல், 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை இணையமைச்சருமான, ஆர்.கே.சிங், நிருபர்களிடம் கூறியதாவது: 

மின்சாரம் திருட்டு, மின் கட்டண பில்களில் குளறுபடி உள்ளிட்ட புகார்கள் மற்றும் குறைபாடுகளை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும், முன்பே பணம் செலுத்தி, பயன்படுத்தும் வகையிலான, 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ரீசார்ஜ்':
இந்த திட்டம், 2019, ஏப்., 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இத்திட்டத்தில் பயன்படும் மீட்டர், 'ஸ்மார்ட் பிரீபெய்டு மீட்டர்' எனப்படும். மொபைல் போன்களுக்கு, 'ரீசார்ஜ்' செய்வது போல், மின் கட்டணத்தையும், 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தால், மின் வினியோக நிறுவனங்களுக்கு, முன்கூட்டியே பணம் கிடைப்பதால், அவற்றுக்கும் பயன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் திட்டப்படி, எல்லா வீடுகளிலும் கட்டாயமாக பொருத்தப்பட உள்ள, ஸ்மார்ட் மீட்டர்கள், ஒரு நாளின் வெவ்வேறு சமயத்தில் பயன்படுத்தப்படும் மின்சார அளவை பதிவு செய்து, மின் வினியோக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும்.

திட்டம் :
அதை, வாடிக்கையாளரும் தெரிந்து கொள்ள முடிவதால், அதற்கேற்ப, பின் வரும் நாட்களில், மின் பயன்பாட்டை, அவர்கள் திட்டமிட முடியும்.'பிரீபெய்டு' முறை என்பதால், வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப, மாத கணக்கில் அல்லது தேவைப்படும் நாள் கணக்கில் மின் கட்டணத்தை, 'ரீசார்ஜ்' செய்து கொள்ளலாம்.