வலுக்கிறது ஜாக்டோ-ஜியோ போராட்டம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வலுத்துவரும் இப்போராட்டத்தில் சுமார் 6 லட்சம் பேர் ஈடுபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ, செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும், பணிக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் அரசு எச்சரிக்கையை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் எழிலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. எழிலகம், குறளகம், பனகல் மாளிகை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மிகக் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர். சுமார் 6 லட்சம் பேர் இதில் பங்கேற்றதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். குறிப்பாக தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 80 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. இதனால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
சென்னையை பிரதானமாகக் கொண்டு இயங்கும் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் (சி மற்றும் டி பிரிவு) ஆகிய அரசு அங்கீகாரம் பெற்ற பிரதான சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

வேலை நிறுத்தத்தை கைவிடுங்கள்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

பொதுத் தேர்வு நடைபெற உள்ள இந்த நேரத்தில் வேலை நிறுத்தம் என்பது மாணவர் சமுதாயத்துக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கும். எனவே ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன். ஆசிரியர்கள் இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தப் போராட்டம் தொடருமா? தொடராதா? என்பது புதன்கிழமைக்குப் பிறகே தெரிய வரும். அதன் பிறகு இதில் என்ன முடிவு எடுப்பது என்பதை அரசு முடிவு செய்யும்.
ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேவையான அறிவுரையும் வழங்கப்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டம் பாயுமா? என்ற சிக்கலான கேள்விகளை கேட்க வேண்டாம். எனவே, மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மனித நேயத்தோடு போராட்டத்தை வாபஸ் பெற்று ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.

பணிக்கு வராதவர்கள் 20 சதவீதமே: அரசு தமிழகத்தில் முக்கிய அரசுத் துறைகளான ஊரக வளர்ச்சி, வருவாய், வணிகவரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரில் 79.5 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர். 20.5 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. பணிக்கு வந்திருந்த பணியாளர்களைக் கொண்டு அரசுப் பணிகள் தொய்வின்றி நடைபெற்றன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பின் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சுப்பிரமணியம், இரா.தாஸ், அன்பரசு, வெங்கடேசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியது:

எங்களது கோரிக்கைகளை முதல்வர் தலையிட்டு சுமுக தீர்வு காண முன் வர வேண்டும்.
எஸ்மா, டெஸ்மா எந்த சட்டம் பாய்ந்தாலும் அவற்றைச் சந்திக்க தயாராக உள்ளோம். கைது செய்தாலும் சம்பள பிடித்தம் செய்தாலும் அது குறித்து கவலைப்பட போவதில்லை.
பொதுத் தேர்வுக்கு பாதிப்பு வராது: இந்தப் போராட்டத்தால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு வராது. ஏனென்றால் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்துள்ளோம். போராட்டம் நீடித்தாலும் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பணியாற்றுவார்கள் என்றனர்.