JEE தேர்வு 15 பேர் 100 சதவீதம்


முதல் முறையாக, 'ஆன்லைன்' முறையில் நடத்தப்பட்ட, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், 15 மாணவர்கள், 100 சதவீத மதிப்பெண் பெற்று உள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுவரை, சி.பி.எஸ்.இ., சார்பில், இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த முறை, தேசிய தேர்வு முகமை அமைக்கப்பட்டு, அதன் வழியே தேர்வு நடத்தப்பட்டது.இதுவரை, ஆண்டுக்கு ஒருமுறை நடந்த தேர்வு, இரண்டு முறை நடத்தப்படும்; மேலும், எழுத்து தேர்வுக்கு பதில், ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதன்படி, முதல் தேர்வு, ஜன., 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதில், 9.29 லட்சம் பேர் விண்ணப்பித்து, 8.74 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிந்து, 12 நாட்களில், நேற்று முன்தினம், தேர்வு முடிவு வெளியானது.இதில், 15 பேர், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். தகுதிப் பட்டியலில், தெலுங்கானா மாணவர்கள் நான்கு பேரும், மஹாராஷ்டிராவை சேர்ந்த, மூன்று பேரும் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற கவுரவ் என்ற மாணவர், தேசிய அளவில், 99.99 சதவீதம் பெற்றுள்ளார்.