பிளஸ் 1 மாணவர்களுக்கு தினமும் மாதிரி தேர்வு


'கடந்த ஆண்டை விட, தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வு நடத்தி, அவர்களை தயார் செய்ய வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு, 2018ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பிளஸ் 1
பாடங்களை, பல பள்ளிகள் நடத்தாமல் விட்டதால், இந்த முடிவை, தமிழக பள்ளி கல்வித்துறை மேற்கொண்டது. ஆனாலும், 2018ல் நடந்த பொது தேர்வில், பிளஸ் 1 மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது. சில பாடங்களில் தோல்வியுற்ற, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பை தொடராமல், 'டிப்ளமா' படிப்புக்கு மாறினர்.இந்த ஆண்டு, அதுபோன்ற நிலை வந்து விடாமல், மாணவர்கள் தொடர்ந்து, பிளஸ் 2 வரை படிக்கும் வகையிலும், பிளஸ் 1 பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்கள் மீது, தனி கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், 'பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், அவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி, அதிக மதிப்பெண் பெற, தயார்படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.'அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, வினாத்தாள் வடிவமைப்பை, மாணவர்களுக்கு புரிய வைத்து, அதன் அடிப்படையில், கேள்விகளை தயாரிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது