புதிதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் உருவாக்கம் - தமிழக அரசு



பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.28,757.62 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் கல்விஇயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள ரூ.2,109.08 கோடி மற்றும் 1,092.22 கோடியை இதுவரை மத்திய அரசு விடுவிக்கவில்லை.


 
ஆனாலும், மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலனைக் கருதி, இத்திட்டங்களை அரசு முனைப்புடன் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்தஇரண்டு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு 2019-20-ம் ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும். இதனை செயல்படுத்த2019-20-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.2,791 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை இந்த அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்துக்கு 2019-20-ம் ஆண்டு வரவுச்-செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.248.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு 2019-20-ம் ஆண்டு வரவுச்-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.