பிளஸ் 2 பொதுத்தேர்வு 'நீட்' பயிற்சி ஒத்திவைப்பு



தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்காக, நடத்தப்பட்டு வரும், 'நீட்' தேர்வுக்கான பயிற்சிகள், ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் மூலம், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்காக, ஒன்றியம்தோறும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு, 'ஸ்பீடு' எனும் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, காணொலி காட்சி மூலம், பயிற்சி வழங்கப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் நடத்தப்பட்டு வந்த மையங்களில் தலா, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

தற்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், நீட் தேர்வு பயிற்சி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிந்த பின், ஏப்ரல் மாதத்தில் இருந்து, மீண்டும் பயிற்சி துவங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:பொதுத்தேர்வு நெருங்கிய சூழலில், 'நீட்' பயிற்சிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. அதிலும், செய்முறை தேர்வு துவங்கிய நிலையில், பயிற்சிக்கு வருவோரின் எண்ணிக்கையில் பெரும் சரிவு இருந்தது. இதனால், பயிற்சி ஒத்தி வைக்கப்பட்டது. தேர்வு முடிந்த பின், ஏப்ரலில் சிறப்பு முகாம்கள் நடத்தப் படும்.இவ்வாறு, அவர் கூறினார்.