ஆங்கில தேர்வில் கூடுதல் வினா; கருணை மார்க் தர கோரிக்கை



சென்னை : சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ஆங்கில தேர்வில், பாட திட்ட விதிகளுக்கு மாறாக, வினா இடம் பெற்றதால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வு, பிப்., 15ல் துவங்கியது. முக்கிய பாடங்களுக்கான தேர்வு, நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், ஆங்கில பாடத்துக்கு தேர்வு நடந்தது. இந்த தேர்வில், ஆறு மதிப்பெண் பிரிவில், இரண்டு நாவல்கள் தொடர்பான கேள்விகள் இடம் பெற்றன.

பாட திட்டம் மற்றும் தேர்வு விதிகளின் படி, ஏதாவது ஒரு நாவலில் இருந்து தான், 'சாய்ஸ்' அடிப்படையில் கேள்வி இடம் பெற வேண்டும். ஆனால், சாய்ஸ் இல்லாமல், இரண்டு நாவல்களுக்கும் பதில் அளிக்கும் வகையில், வினா இடம் பெற்றது. இதனால், பெரும்பாலான மாணவர்கள், ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளிக்க முடிந்தது. 

இது குறித்து, பெற்றோர் மற்றும் மாணவர் தரப்பில், ஆறு மதிப்பெண்ணை கருணையாக வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தேர்வு முடிந்த பின் அமைக்கப்படும், உயர்மட்ட கமிட்டியினர் ஆய்வு செய்து, கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து, இறுதி முடிவு எடுப்பர் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.