பிளஸ் 2 தேர்வில், இயற்பியல் மற்றும் பொருளியல் பாட வினாத்தாள், மிக எளிதாக இருந்ததால் 'சென்டம்' கிடைக்க அதிக வாய்ப்பு!

பிளஸ் 2 தேர்வில், இயற்பியல் மற்றும் பொருளியல் பாட வினாத்தாள், மிக எளிதாக இருந்ததால், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 பொது தேர்வில், நேற்று இயற்பியல், பொருளியல் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வு நடந்தது. ஏற்கனவே, கணிதம், விலங்கியல் மற்றும் வணிகவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்த நிலையில், நேற்றைய தேர்வுகளுக்கு, மாணவர்கள் ஒரு வித அச்சத்துடன் சென்றனர்.

வாய்ப்பு

ஆனால், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக, வினாத்தாள் எளிமையாக இருந்தது. மிகவும் நன்றாக படித்து தயாரான மாணவர்கள், கட்டாயம், 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளது. சராசரி மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் கிடைக்கும் என, கூறப்படுகிறது.இதுகுறித்து, சென்னை சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யாமந்திர் பள்ளியின் பொருளியல் ஆசிரியர், பழனி கூறியதாவது:பொருளியலில் பெரும்பாலான கேள்விகள், பாடத்தின் பின்பக்க வினா தொகுப்பில் இருந்து, இடம் பெற்றன.

இரண்டு மதிப்பெண் மற்றும் ஒரு மதிப்பெண் பிரிவில், தலா ஒரு வினாவை தவிர, மற்ற அனைத்தும் மிக எளியவை. அனைத்து பாடங்களையும் புரிந்து படித்தவர்களுக்கு, இந்த வினாத்தாளில் மதிப்பெண் பெறுவது எளிது.முறைகேடுசரியான விடையை தேர்வு செய்யும் பிரிவில், தொழில்முனைவோர் தொடர்பான கேள்வியில், வினாத்தாளில் உள்ள இரண்டு விடை குறிப்புகள் சரியாக உள்ளன. புத்தகத்திலும் இரண்டு விடைகளும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், திருப்பூரில் மட்டும், தனியார் பள்ளி மாணவர் ஒருவர் முறைகேடுபிரச்னையில் சிக்கியதாக, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.