5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின் வாரியத்தில் வேலை வாய்ப்பு

மின் வாரியத்தில், 'கேங்மேன்' வேலையில் சேர விரும்புவோர், இன்று முதல், இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிக்கு, கேங்மேன் என்ற பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை, மின் வாரியம், 7ம் தேதி வெளியிட்டது.  இதற்கு, ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எழுத்து, நேர்முகத் தேர்வு வாயிலாக, ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, வாரிய இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.  

இந்நிலையில், தேர்தல் சமயத்தில், ஆட்கள் தேர்வு செய்யும் பணியை நிறுத்தி வைக்குமாறு, தேர்தல் ஆணையத்திடம், மின் ஊழியர்கள் மனு அளித்துள்ளனர். 

இது குறித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின், பொதுச் செயலர், எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின், பொதுத் துறை நிறுவனங்களில், பணி நியமனம், பதவி உயர்வு பணிகளை மேற்கொள்ளக் கூடாது. மின் வாரியம், கேங்மேன் என்ற, 5,000 புதிய பணியிடங்களை உருவாக்கி, அதை நிரப்ப, வேகம் காட்டுகிறது.  

லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்க உள்ள நிலையில், தேர்வுக்கு, மார்ச், 22ல் துவங்கி, ஏப்ரல், 24 வரை விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு, பயன் அளிப்பதாக இருக்கும். இதனால், தேர்தல் முடியும் வரை, கேங்மேன் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்தி வைக்குமாறு, தேர்தல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடத்தை விதி அமலுக்கு வரும் முன், கேங்மேன் பதவிக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. விண்ணப்பம் வாங்குவதை நிறுத்தி வைக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் இருந்து உத்தரவும் வராததால், நாளை முதல், திட்டமிட்டபடி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.