ரயில்வே ஹெல்ப்பர் வேலைக்கு போட்டியிடும் 82 லட்சம் பட்டதாரிகள்



ரயில்வேயில்  கீழ் நிலையில் வேலை பார்க்க பட்டப்படிப்புகளை முடித்த 82 லடசம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில், ரயில்வே 62,907 லெவல் 1 பணியாளர்களையும் 1,88,721 குரூப் D பணியாளர்களையும் தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கு 2 கோடிக்கு  அதிகமானவர்கள் விண்ணப்பித்தனர். லெவல் 1 தேர்வு ரயில்வேயில்  கீழ் நிலையில் பணிபுரியும் நபர்களைத் தேர்வு செய்ய நடத்தப்படுவது. கேட்மேன், ஹெல்ப்பர், டிராக்மேன் போன்ற வேலைகளுக்கு இந்த பிரிவில் ஆட்களை எடுப்பார்கள்.  இவர்களுக்கு உடல்தகுதித் தேர்வும் நடத்தப்படும். 10 ஆம் வகுப்பு படித்தாலே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  ஆனால் விண்ணப்பித்தவர்களில் 4,19,137 பேர் பி.டெக் படித்தவர்கள். 40,751 பேர் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு விண்ணப்பித்த 1,69,52,957 பேருக்கு இவர்கள் போட்டியாக உள்ளனர்.

இதே போல, குரூப் D பணிகளுக்கு விண்ணப்பித்த 19.1 லட்சம் பேரில் 3.83 லட்சம் பேர் கலை படிப்புகளிலும் 9.57 லட்சம் பேர் அறிவியல் படிப்புகளிலும் இளநிலை பட்டம் பெற்றவர்கள். 1,27,018 பேர் அறிவியல் படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள். இந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி 2018ஆம் ஆண்டின் பாதியில் தொடங்கியது.

 இதுவரை தேர்வு செய்யப்பட்டிருக்கும் 75, 485 பேரில் பலரும் எஞ்சினியரிங் அல்லது வேறு துறைகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள். இந்தியாவில் வேலை வாய்ப்பு பற்றாக்குறை நிலை மிகவும் மோசமாக இருப்பதற்கு சான்றாக இது உள்ளது. சில பட்டப்படிப்புகளை முடித்து சிறப்பான தகுதி உள்ளவர்களுக்கு அவர்களுடைய துறை சார்ந்த வேலை இல்லாததால், கிடைக்கிற வேலைக்குச் செல்ல முடிவுசெய்கிறார்கள். வந்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் ரயில்வே நிர்வாகம் அதிலிருந்து தேர்வு செய்யவும் தாமதம் ஆகிறது.

அடுத்து மூன்று மாதங்களில் 60,000 காலி இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வரும் மே மாதத்திற்குள் பணிநியமன ஆணை கிடைக்கும் எனவும் இந்த ஆண்டுக்குள் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட முயற்சி எடுக்கப்படுகிறது எனவும் ரயில்வே நிர்வாகத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே, ஆன்லைன் விண்ணப்ப நடைமுறையால் 16.67 ரீம் (அல்லது 8,333 ஷீட்) காகித பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ரயில்வே கூறியுள்ளது.