அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடு!



தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வி தொலைக்காட்சியின் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிகழ்ச்சி திட்டமிடுதல் சார்ந்த பணிமனை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்றது.. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படு்கிறது. இதற்காக 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய சேனல் தொடங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 8வது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோரது மேற்பார்வையில், கல்வித் துறை இணை இயக்குநர்கள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகினறனர். 
 
இந்த தொலைக்காட்சியில் 24 மணி நேரமும், கல்வித் தொடர்பான தகவல்கள் மாணவர்களைச் சென்றடையும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதற்கான நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி அரசு செட்டாப் பாக்ஸில் 200 வது சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறலைப் பற்றிய விளக்க உரையும், அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும். காலை 5.30 மணிக்கு நாள் குறிப்பு என்ற தலைப்பில் அன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்கப்படும். இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் உலக நிகழ்வுகள், செய்தித் தொகுப்புகள், அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள் கொண்டு சேர்க்கப்படும். காலை 5.30 மணி முதல் 6 மணி வரை நலமே வளம் என்ற தலைப்பில் உடற்பயிற்சி, யோக செயல் விளக்கம், ஆரோக்கியம் குறித்த விளக்கவுரை, உணவு முறை, எளிய மருத்துவம் குறித்து விளக்கப்படும். 6 முதல் 6.30 மணி வரை குருவே துணை என்ற நிகழ்ச்சி மூலம் சாதனை படைத்த ஆசிரியர்கள் குறித்த விளக்கப் படம், அவர்களது சாதனைப் பேட்டிகள், கல்வியாளர்களின் கருத்துகளும் இடம் பெறும். காலை 6.30 முதல் 7 மணி வரை சுட்டி கெட்டி என்ற நிகழ்ச்சியில் சாதனை மாணவர்கள், அவர்களது கண்டுபிடிப்புகள் இடம் பெறும். 
 
தொடர்ந்து 7 மணி முதல் 7.30 மணி வரை வல்லது அரசு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசின் கல்வித் துறையின் செயல்பாடுகள், அறிவிப்புகள், பேட்டிகள், கல்வித் துறை மானியங்கள், நலத் திட்டங்கள், அரசின் சாதனை விளக்கங்கள் இடம் பெறும். 7.30 மணி முதல் 8 மணி வரை ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற நிகழ்ச்சியில் நல்லொழுக்கக் கதைகள், மாணவா்களின் குறு நாடகங்கள், வாழ்வியில் உரைகள் இடம் பெறும். 8 மணி முதல் 8.30 மணி வரை மணியோசை என்ற நிகழ்ச்சி மூலம் சிறந்த பள்ளியின் செயல்பாடுகள் குறித்த சிறப்புப் பார்வை, கட்டமைப்பு வசதிகள், சாதனைகள் குறித்து விளக்கப்படும். 8.30 முதல் 9 மணி வரை தாயே தமிழ் நிகழ்ச்சி மூலம் தமிழ்ப் பாடங்கள், பாடல்கள், தமிழறிஞர்களின் உரைகள், குழந்தைப் பாடல்கள், தமிழ்ப்பாரம்பரிய காட்சிகள் இடம் பெறும். 9 மணி முதல் 9.30 மணி வரை ஏ டூ இசட் என்ற நிகழ்ச்சியில் ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி, ஆங்கில இலக்கியம், ஆங்கிலம் பேசும் பயிற்சிகள், ஆங்கில அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறும். 9.30 முதல் 10 மணி வரை எளிய கணிதம் என்ற நிகழ்ச்சியில், கணிதப் பாட விளக்கம், கணித செயல்பாடுகள், கணிதப் புதிர்கள், கணித ஆய்வக விளக்கம் உள்ளிட்டவை இடம் பெறும். 10 மணி முதல் 10.30 மணி வரை அறிவோம் அறிவியல் என்ற நிகழ்ச்சி மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் பாடங்கள், செய்முறை விளக்கங்கள் இடம் பெறும். 10.30 மணி முதல் 11 மணி வரை சுவடுகள் நிகழ்ச்சியில் பழைய வரலாற்றுப் பின்னணிகள், புவியியல் பாடங்கள், பொது அறிவு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
 
11 மணி முதல் 11.30 மணி வரை உயிர்த்துளி என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முறை சாராக் கல்வி, மாற்றுத்திறனாளி மாணவர் ஊக்கப்படுத்துதல், முதியோர் பாதுகாப்பு, தையல், கைவினை பொருட்கள் தயாரிப்பு, ஓவியம் வரைதல், விவசாயம் குறித்த நிகழ்ச்சி இடம் பெறும். 11.30 மணி முதல் 12 மணி வரை ஏணிப் படிகள் என்ற நிகழ்ச்சி மூலம் போட்டித் தேர்வுகளுக்கு கற்றல், நீட், ஜேஇஇ, சி.ஏ., டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டிகள், பயிற்சி வகுப்புகள் நேரடியாக வழங்கப்படுகின்றன. பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் குழு விளையாட்டுகள், விளையாட்டில் சாதித்த மாணவர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் சாதனைகள் குறித்து விளக்கப்படும். மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை முத்தமிழ் முனையம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் கல்வி சார்ந்த பாடல் நனம், தமிழ் பாடல்கள், வாய்ப்பாட்டு, இசைக் கோர்வை உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தினமும் தொகுத்து வழங்கப்படவுள்ளன. இவை தினமும் மூன்று முறை என 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும். மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்: இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் மீடியா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஒளிப்பதிவு குழுவினருடன் சென்று மாவட்டத்தில் உள்ள கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை காட்சி பதிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு 32 மாவட்டங்களிலும் கல்வி தொலைக்காட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு காட்சிப் பதிவுகள் நடைபெற்று வருகின்றது. இவை சென்னை காட்சி பதிவு மையத்தில், ஒருங்கிணைக்கப்பட்டு, விரைவில் ஒளிபரப்பு தொடங்வுள்ளது. இந்தத் தொலைக்காட்சி, தொடக்கப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கும். பாடத் திட்டங்களுக்குள்தான் பயிற்சிகள் வழங்கப்படும்.

பள்ளிகளில் தொலைக்காட்சிகள்:

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்த்து பயன் பெற முடியும். இது, இந்திய அளவில் கல்வித் துறையின் முன்னோடி திட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை கல்வியாளர்கள் தெரிவித்தனர்.. பள்ளிக்கல்வி இயக்குநரின் ஆலோசனையின் பேரில் இந்த பணிமனையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அமலன் ஜெரோம்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆப்ரகாம் மேஷாக் ஆகியோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கின்றார்கள்.