ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதல்முறையாக ஆன்லைன் தேர்வுமுறை: கணினி ஆசிரியர் தேர்வில் அறிமுகமாகிறது

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முதல்முறையாக ஆன்லைன் தேர்வுமுறை கணினி ஆசிரியர் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. முறைகேடுகளை தடுக்கவும் தேர்வு முடிவுகளை வெகுவிரைவில் வெளியிடவும் இப்புதிய முறை பின்பற்றப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் உட்பட பல்வேறு போட்டித்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இத்தேர்வுகளுக்கு முன்புவிண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டும் ஆன்லைனிலேயே வழங்கப்படுகிறது.

ரயில்வே தேர்வுகள், வங்கிப்பணியாளர் தேர்வுகள், எல்ஐசி தேர்வுகள் உள்ளிட்ட பெரும்பாலான மத்திய அரசு தேர்வு வாரியங்கள்ஆன்லைன் தேர்வுகளுக்கு மாறிவிட்ட நிலையில்,ஆசிரியர் தேர்வு வாரியமும் முதல்முறையாக ஆன்லைன் தேர்வுமுறைக்கு அடியெடுத்து வைக்கிறது. விரைவில் நடத்தப்பட உள்ள கணினி ஆசிரியர் தேர்வில் ஆன்லைன் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு, அரசுபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண்ணில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இந்த புதிய முயற்சியை ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.புதிய மதிப்பீட்டு முறைவிண்ணப்பதாரர்களின்எண்ணிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஒரேநாளில் அனைவருக்கும் தேர்வு நடத்த முடியாது என்பதால் அணி அணியாக ஆன்லைன் தேர்வை நடத்தவும், அதற்கேற்றவாறு வினாத்தாளின் கடினத்தை சமன்செய்ய புதிய மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முறைகேடுகளை தடுக்க...

புதிதாக நடைமுறைப்படுத்தப்பட இருக்கிற ஆன்லைன் தேர்வுமுறை குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், தேர்வு முடிவுகளை வெகுவிரைவில் வெளியிடவும் ஆன்லைன் தேர்வுமுறையை அறிமுகப்படுத்த உள்ளோம்.அந்த வகையில், முதல்கட்டமாக கணினி ஆசிரியர் தேர்வில் இப்புதிய முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. படிப்படியாக மற்ற தேர்வுகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தனர். அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் (கணினி பயிற்றுநர்-கிரேடு-1) பதவியில் 814 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் பதிவு மார்ச் 20-ம் தேதி தொடங்குகிறது.இதற்கு ஏப்ரல் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு நாள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அனேகமாக மே மாதத்தில் தேர்வு நடத்தப்படலாம். ஆன்லைன் தேர்வுநடத்தப்படுவதால் தேர்வு முடிவுகளும்மே இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.