பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்



புதுக்கோட்டை,மார்ச்.8- பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வெள்ளிக்கிழமை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா வழங்கினார்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டம், வடவாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவுக் காவலராகப் பணிபுரிந்தவர் ஏ.லெட்சுமணன்.இவர் பணிக்காலத்தின் போது உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.இவரது மகன் லெ.பழனிச்சாமி தனது தந்தை பணியின் போது இறந்து விட்டதால் தனது குடும்பம் வறுமை நிலையில் உள்ளதாகவும் தனது கல்வித்தகுதிக்கேற்ப பணிவாய்ப்பு வழங்க கோரி உரிய ஆவணங்களுடன் கருணை அடிப்படையில் நியமனம் கோரி  விண்ணப்பித்திருந்தார்.

இவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்கள் பணிக்காலத்தில் இறந்த ஏ.லெட்சுமணன் என்பவரின் மகன் லெ.பழனிச்சாமிக்கு புதுக்கோட்டை மாவட்டம்,ஏ.மாத்தூர்,அரசு மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணி நியமன ஆணையினை வழங்கினார்.பின்னர் அரசுப்பணியில் சேவையாற்றிட தக்க அறிவுரைகளையும், வாழ்த்துக்களையும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன்,பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மு. மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலக இருக்கைப் பணி கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன்   ஆகியோர் உடன் இருந்தனர்.