அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு தேதியை, முன்கூட்டியே அறிவிக்க TRB-க்கு கோரிக்கை!



'அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு தேதியை, முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க, டெட் முதல் தாள்; எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க, டெட் இரண்டாம் தாளும் தேர்ச்சி பெறுவது அவசியம்.'பட்டதாரிகள் மற்றும் டிப்ளமா கல்வி படிப்பு முடித்தவர்கள், டெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அரசு பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர்பணியிடங்களில் சேர, போட்டி தேர்வு நடத்தப்படும்.

'அதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிக்கப் படும்' என, தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.இதை பின்பற்றி, சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பட்டியலினத்தவர், பழங்குடியினர்களுக்கான ஒதுக்கீட்டில், பின்னடைவு காலி இடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பிப்ரவரியில் அறிவித்தது.

மொத்தம், 148 பணிஇடங்களுக்கு, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், போட்டி தேர்வு எப்போது என, இன்னும் அறிவிக்கவில்லை. மேலும், போட்டி தேர்வின் விதிகள் மற்றும் பாட திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தேர்வுக்கு பட்டதாரிகள் தயாராகும் வகையில், முன்கூட்டியே தேர்வு தேதியைஅறிவிக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.