இன்ஜினியரிங், கலை, அறிவியல் படிப்பு:தேர்வில் சீர்திருத்தம்



இன்ஜினியரிங், கலை, அறிவியல் படிப்புகளில், மாணவர்களின் புரிதல் அடிப்படையில், தேர்வில் சீர்திருத்தம் செய்யவும், மதிப்பீட்டு முறையை மாற்றவும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., புதிய திட்டம் தயாரித்துள்ளது.

நாடு முழுவதும், இன்ஜினியரிங் படித்து முடித்த ஏராளமானோர், வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர்.

பல தொழில் நிறுவனங்களில், இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தும், தேவையான திறமையுடன் பட்டதாரிகள் கிடைப்பதில்லை.

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வு நடத்தியது. அப்போது, பல்கலை மானிய குழு சார்பில், சில பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வரும் கல்வி ஆண்டில், தேர்வு முறையிலும், மதிப்பீட்டு முறையிலும் சீர்திருத்தம் செய்ய, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.இதற்கான, 87 பக்க வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அறிக்கையில், 30 வகையான திறன்கள் மற்றும் அளவீடு அடிப்படையில், தேர்வு முறையை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த அறிக்கையில் உள்ள அம்சங்களில் மாற்றம் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால், மார்ச், 9க்குள் கருத்து தெரிவிக்கலாம் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

விபரங்களை, www.ugc.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.